தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (12) எட்டுத்தொகை !

எட்டு இலக்கியங்களைத் தன்னகத்தே  கொண்ட  தொகை நூல்களின் பொதுப் பெயர் எட்டுத் தொகை  !

 

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு  என்பன எட்டுத் தொகை நூல்களாம். இவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாக ஒரு பாடல் உளது. உங்களில் பலர் படித்த பாடல் தான் !

 

-------------------------------------------------------------------------------------

 

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு;

.......ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்,

கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம்புறமென்று,

.......இத்திறத்தது  எட்டுத் தொகை” !

 

-------------------------------------------------------------------------------------

   

இவற்றுள் புறநானூறு, பதிற்றுப் பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய செய்திகளை நன்கு புலப்படுத்துவன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் ஐந்தும் அகப்பொருளாகிய இன்பத்துறை பற்றிய ஒழுக்க உணர்ச்சிகளை அழகுற எடுத்துக் கூறுவன. பரிபாடல் அகம், புறம் என்னும் இரண்டையும் இனிது எடுத்து உரைப்பது !

 

புறப்பொருள் பற்றிய தொகை நூல்களில், போரைப்பற்றிய பாடல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, சங்க கால தமிழ்ப் புலவர் காதல், வீரம் என்னும் இரண்டைப் பற்றி மிகுதியாகப் பாடினர் என்பது தெளிவாகும் !

   

ஏறத்தாழப் புலவர் பெருமக்கள் ஐந்நூற்றுவர் பாடிய பாக்களின் தொகுதியே எட்டுத் தொகையாகும். அப்புலவர்கள் தமிழகத்துப் பல ஊர்களைச் சேர்ந்தவர்; பரந்துபட்ட காலத்தவர்;  பல்வேறு  தொழிலினர்; இவருள் சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடைப் பெருவேந்தரும், அரசமாதேவியரும், சிற்றரசரும் அவர்தம் மகளிரும் இடம் பெற்றுள்ளனர் !

 

எட்டுத்தொகைச் செய்யுள்களில், பெருநில வேந்தரின் பெருமிதமான போர்த் திறன்களையும், வெற்றிச் சிறப்புகளையும் விரித்துக் கூறும் பாக்கள் பல; வரையாது வழங்கும் வள்ளன்மையை வகுத்துரைக்கும் செய்யுள்கள் பல; நல்லொழுக்கத்தை நவில்வன சில; கல்வி மேம்பாட்டினைக் கருத்தில் பதிய வைப்பன சில !

 

ஆட்சி முறையை அழகுற எடுத்து இயம்புவன சில; மறக்குடி மகளிரின் மாண்பைப் புலப்படுத்துவன சில; கற்பரசிகளின் காதல் வாழ்வைக் கவினுறக் காட்டுவன பற்பல; வெஞ்சின வேந்தர் வஞ்சினம் கூறும் செய்யுள்கள் சில; போரைத் தடுத்துப் புலவர் அறிவு புகட்டுவன சில; கடவுள் நன்னெறி காட்டுவன சில; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணை அன்பொழுக்கங்களை இன்பம் ததும்ப இனிது விளக்குவன எத்துணையோ பல; இயற்கைக் காட்சிகளை எழிலுறச் சித்திரித்துக் காட்டுவன பல !

 

இச்செய்யுள்களுள் இடையிடையே தொன்ம (புராண) மறவனப்பு (இதிகாச)ச்  செய்திகளும், தமிழ்நாட்டுத் தலைநகரங்களைப் பற்றிய சிறப்புக்களும், வட இந்திய நாட்டினைப் பற்றிய பல செய்திகளும், பிற வரலாற்றுக் குறிப்புகள் சிலவும் இடம் பெற்றுள்ளன !

 

எட்டுத் தொகையில் இடம்பெற்றுள்ள நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும்  அடுத்து வரும் நாள்களில் காண்போம் !

 

பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நமது இலக்கியங்களைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருப்பது தானே சிறப்பு ! படித்த இலக்கியங்களைப் பற்றிய செய்திகளைக் காலப்போக்கில் மறந்து விட்டோர் பலர்; படிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டோர் பலர்; ஆழமாக அன்றி அகலமாகத் தெரிந்து வைத்திருப்போர் பலர்; தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா என்று எண்ணத்தில் காத்திருப்போர் பலர் !

 

செம்மொழி என்னும் தகுதி பெற்று உயர்ந்து விளங்கும் நம்மொழியின் இலக்கியங்களைப் பற்றிய செய்திகளை மீண்டும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கும் செயலில் ஈடுபடுவது தவறல்லவே ! தொடங்குவோம் வாரீர் !!

 

இன்றைய கட்டுரையை நிறைவு செய்யும் முன் ஒரு செய்தி. ஆங்கிலச் சொற்களுக்கு நேர் பொருள் தரும் தமிழ்ச் சொற்களைத் தேடி எங்கெங்கோ அலைகிறோம். இலக்கியங்களில் தேடினோமா ? இனியாவது தேடுவோம். ஓரிரு புதிய சொற்கள் உங்கள் பார்வைக்கு !

--------------------------------------------------------------------------------------

 

MESS.............= அயிலகம் (புறநானூறு- பாடல்.399)

BALCONY....= அரமியம் (மதுரைக் காஞ்சி.வரி.451)

OUT-PUT......= ஈகை வளம் (கலித்தொகை.95:9)

 

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு 2053, மேழம் (சித்திரை) 13]

{26-04-2022}

-------------------------------------------------------------------------------------

 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (11) மலைபடுகடாம் !

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள  மலைப்பகுதியை ஆண்ட நன்னன் மீது பாடப்பெற்ற இலக்கியம் !

 

திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் என்னும் ஊரை அடுத்துள்ள மலைப்பகுதியில் வாழ்ந்த நன்னன் என்ற சிற்றரசன்பால் பரிசு பெற்று மீண்டு வந்த ஒருவன், எதிர்ப்பட்ட கூத்தன் ஒருவனை அவன்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது மலைபடுகடாம் என்னும் இந்நூல் !

 

பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் பத்தாவதாக வைத்து எண்ணப்பெறும் இந்நூலை இயற்றியவர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர். 583 அடிகளைக் கொண்ட பாடலால் யாக்கப் பெற்றுள்ளது இத் தொகைநூல் !

 

மதம் பிடித்த யானை  பேரொலி எழுப்பும். எதிர்ப்பட்ட அனைத்தையும் சிதைத்து அழிக்கும். இதனால் ஏற்படும் ஒலி எங்கும் எதிரொலிக்கும். அதைப் போல மலையில் பல்வகை இரைச்சல்கள் ஏற்படுவது இயல்பு. பெருங்கௌசிகனார் நன்னனது மலையை கடாம் (மதம்) கொண்ட யானைக்கு உவமையாகச் சொல்லி, மதயானையால் ஏற்படும் பலவகை இரைச்சலைப் போல, மலையில்  பல்வகை ஒலிகள் உண்டாவதைப் பட்டியல் இடுகிறார் தன் பாடலில். இதனால்தான்  இவ்விலக்கியத்திற்கு மலைபடு கடாம் எனப்பெயர் ஏற்பட்டது !

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும்.  முன்பின் அறிமுகம் ஆகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும்.  தமிழ்மண்ணில் பிறந்த அனைவர்க்கும் இது பண்பாகவே பதிந்து விட்டது.  இதுவே, விருந்தோம்பலுக்கு வழிவகுத்தது எனலாம் !

 

விருந்துஎன்ற சொல்லுக்கு புதுமை’, ‘புதிய வரவு’, ‘புதிய வருகைஎன்ற சிறப்புப் பொருள்கள் உண்டு.  முன்பின் தெரியாதவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது விருந்தோம்பல்எனப்படும். இதனை மிகுதியாகவே மலைபடுகடாம்நூலில் காண முடிகிறது !

 

பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் மற்றும் வழிப்போக்கர் முதலானோரைத் தத்தம் உறவினராகக் கருதி இனிதாய் வரவேற்று உபசரிப்பதை, பிற இலக்கியங்களில் காணமுடியா விருந்தோம்பலை மலைபடுகடாம்எனும் நூலில் விரிவாகக் காணமுடிகிறது.  வந்தாரை வரவேற்றுத் தத்தம் வளத்திற்கேற்ப உணவு பரிமாறி அன்பு காட்டி மகிழ்ந்த நிலையை மலைபடுகடாம்நூலில் தெளிவாகக் காண முடிகிறது !

 

மலைநாடு வழியாகச் செல்லும் வம்பல மாக்களுக்கு (புதிய மனிதர்கள்) குறிஞ்சி நிலக் குறத்தியர் உணவளித்து மகிழும் பாங்கு, கானவர் (வேடர்) அளிக்கும் விருந்து, உழவர் உண்பித்து மகிழும் விருந்தோம்பல் பண்பு, எனப் பல்வகை மக்களும் பின்பற்றி வந்த விருந்தோம்பலைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்துள்ளார் பெருங்கௌசிகனார் !

 

இவ்வாறு பண்டைத் தமிழகத்து மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் படம்பிடித்துக் காட்டும் இந்நூலில், இக்காலத்தில் புழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற நேர்ப்பொருள், இணைப்பொருள் அல்லது புனைப்பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் பல மலைபடுகடாத்தில் பரவலாகக் காணக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !

 

-------------------------------------------------------------------------------------

 

DRUM (MUSIC INSTRUMENT)..= ஆகுளி (மலை.வரி.03)

TOOL KIT........................................= கலப் பை (மலை.வரி.13)

SONS.................................................= மகார் (மலை.வரி.236)

MIGRATION...................................= புலம்பெயர்வு (மலை.வரி.392)

BEAR.................................................= குடாவடி (மலை.வரி.501)

BABY ELEPHANT...........................= கயமுனி (மலை.வரி.107)

ARROW-ROOT.................................= கூகை (மலை.வரி.137)

SCHEME............................................= நடவை (மலை.வரி.432)(த-ஆ.அக)

GLASS.................................................= பளிங்கு (மலை.வரி.516)

FEATHER............................................= பீலி (மலை.வரி.5)

GUEST..................................................= மகமுறை (மலை.வரி.185)

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 11]

{24-04-2022}

--------------------------------------------------------------------------------------

வியாழன், 21 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (10) பட்டினப் பாலை !

காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத் திணையில் பாடப் பெற்ற இலக்கியம்.

 

பத்துப் பாட்டு தொகை நூல்களுள் ஒன்பதாவதாக இடம்பெறுவது பட்டினப்பாலை. இந்நூலின் பெயரில் உள்ள பட்டினம் என்னும் சொல் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது. பாலை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தருவது !

 

காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத் திணையில் இப்பாட்டு அமைந்து  உள்ளமையால், பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது. 301 அடிகளால் ஆன பாடலைக் கொண்டு இந்நூலை யாத்தவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் பெரும் புலவர் !

 

வேற்று நாட்டிற்குச் செல்ல எண்ணிய தலைவன் ஒருவன், தனது நெஞ்சை விளித்து, ‘என் தலைவியில் தோள்கள் கரிகால் வளவனுடைய செங்கோலைக் காட்டிலும் குளிர்ச்சி உடையவை; கடந்து செல்லக் கருதும் காட்டு வழிகள், அவ்வரசன் பகைவர் மேற் செலுத்தும் வேலைக் காட்டிலும் வெப்பத்தை உடையவை !

 

ஆதலால், பல சிறப்புகளை உடைய காவிரிப் பூம்பட்டினத்தையே பரிசாகப் பெறுவேன்; ஆயினும் என் தலைவியைப் பிரிந்து வரமாட்டேன்என்று தான் பிரிந்து செல்வதை தவிர்த்துக் கூறுவதாக இப்பாட்டு அமைந்துள்ளது!

 

இது கரிகாற் சோழன் மீது பாடப்பட்டது; இப்பாட்டில், சோழ வள நாட்டின் செழுமையும், காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்புகளும், கரிகாலனுடைய போர்ச் செயல்களும், ஆட்சிமுறையும், நகர மாந்தர் தம் பழக்க வழக்கங்களும், கடல் வாணிகப் பெருமையும், கடைத் தெருக்களின் சிறப்பும், பிறவும் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளன !

 

இப்பாட்டினைப் பாடியதற்காக, கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகால் வளவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கினான் என்பது, கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்தின் மூலம் தெரியவருகிறது !

 

மாசு மறுவற்றுப் பளிச்சென்று ஒளிவீசும் வெள்ளி (சுக்கிரன்) கிழக்கில் தோன்றாமல் தென் திசைக்குப் போகலாம், நீர்த் துளிகளை உண்டு, பாடித் திரிந்து  மகிழும் வானம்பாடி, வருந்தும் வகையில், மழை பெய்வதைத் தவிர்த்து வானம் பொய்க்கலாம், ஆனால் மலையில் தொடங்கிக் கடலில் புகும் காவிரி ஆறு என்றும் தவறாமல் தன்னுடைய நீரை வயல்களில் நிறைத்துப் பரப்பிப் பொன் கொழிக்கும் சோழ வள நாடு, என்று காவிரியைப் பற்றிப் பாடுகிறார் புலவர். இதோ அந்தப் பாடல் வரிகள் :-

-------------------------------------------------------------------------------------

 

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசை திரிந்து தெற்கு ஏகினும்,

தற்பாடிய தளியுணவின்

புள்தேம்பப் புயல் மாறி,

வான் பொய்ப்பினும் தான் பொய்யா,

மலைத் தலைய கடற் காவிரி,

புனல் பரந்து பொன் கொழிக்கும்...

 

-------------------------------------------------------------------------------------

 

காவிரியின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ! என்னே காலத்தின் கோலம் ! இயற்கையை மதிக்கத் தெரியாத மனிதன் ! மனிதனை மிதிக்கத் துணிந்துவிட்ட இயற்கை ! இஃது எங்கு கொண்டுபோய் விடுமோ !

 

சிறப்புகள் பல வாய்ந்த பட்டினப்பாலையில் ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் கலைச் சொற்கள் பல பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போமா !

--------------------------------------------------------------------------------------

 

KITCHEN..................................= அட்டில் (பட்.43)

BAZAAR....................................= கடைத்தெரு (பட்.158)

VERANDAH..............................= இடைகழி (பட்.144)

CROCODILE.............................= கராம் (பட்.242)

PLANET....................................= கோள்மீன் (பட்.68)

PAIL...........................................= திண்ணை (பட்.143)

SLIPPER...................................= தொடுதோல் (பட்.265)

CENTER....................................= நாப்பண் (பட்.194)

STAIR–CASE STEPS...............= படிக்கால் (பட்.142)

CAKE.........................................= பண்ணியம் (பட்.203)

BANNER....................................= பதாகை (பட்.182)

VENUS......................................= வெண்மீன் (பட்.01)

BROAD......................................= வியன் (பட்.08)

GUEST HOUSE..........................= துச்சில் (பட்.58)

BRAIDED COCONUT LEAF...... = கிடுகு (பட்.78)

HUT............................................= குரம்பை (பட்.198)

JAIL............................................= பிணியகம் (பட்.222)

SOLDIER...................................= வயவர் (பட்.232)

FOREIGNERS...........................= வம்பலர் (பட்.249)

HUNTERS.................................= எயினர் (பட்266)

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 08]

{21-04-2-22}

--------------------------------------------------------------------------------------

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (09) குறிஞ்சிப்பாட்டு !

 

பண்டைய மலர்கள்   99-ன் பெயர்களை  இப்பாட்டில்   பட்டியலிடுகிறார் கபிலர் !

 

பத்துப்பாட்டுத் தொகை நூல்களுள் எட்டாவதாக இருப்பது குறிஞ்சிப் பாட்டு. இதனை இயற்றியவர் கபிலர். இருநூற்று அறுபத்தோறு அடிகளை உடைய குறிஞ்சிப் பாட்டில், அக்காலப் பூக்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் புலவர் பாடியுள்ள திறம் வியப்பை அளிக்கிறது !

 

தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காதல் வாழ்க்கைக்கு உடம்படுதல் குறிஞ்சிஒழுக்கமாகும். காதல் வாழ்வையடுத்து மணம் முடித்து இல்லற வாழ்வு தொடங்கும். இல்லறம் நடத்தும் காலை, பொருள் தேடித் தலைவன் பிரிந்து செல்வது பாலைஒழுக்கம். பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் (மனத் துயருடன் பொறுத்து இருத்தல்) முல்லைஒழுக்கம் !

 

தலைவன் பொருளீட்டிக் கொண்டு திரும்பி வருகிறான். ஆனால் சற்று கூடுதல் காலம் ஆகிவிட்டது. காலம் தாழ்த்தி வந்ததால் தலைவன் மீது சினம் கொண்டு தலைவி ஊடுகிறாள். இவ்வாறு ஊடல் கொள்ளும் வாழ்க்கை முறையை மருதம்ஒழுக்கம் என்றனர் நம் முன்னோர் !

 

ஊடல் கொண்ட  தலைவி, சற்று நேரத்தில் சினம் நீங்கி, தலைவன் மீது இரக்கம் கொள்கிறாள். இதை நெய்தல்ஒழுக்கம் என்கின்றன இலக்கியங்கள். குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு வருவோம் !

 

தலைவனும் தலைவியும் சந்தித்து ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு களவு முறையில் ஒழுகி வருகின்றனர்.  தலைவி தன் தலைவன் மீது கொண்ட காதலைத் தோழி  செவிலித் தாய்க்கு எடுத்துக் கூறுவது போல இப்பாட்டு அமைந்துள்ளது. ஆகையால் இதற்குக் குறிஞ்சிப் பாட்டுஎனப் பெயர் வழங்கலாயிற்று !

 

இப்பாட்டின்கண் முருகவேளைப் பற்றிய செய்திகளும், பற்பல பூக்களின் பெயர்களும், பற்பல பூச்சிகளின் பெயர்களும், குறிஞ்சி நில மக்களின் பழக்க வழக்கங்களும், பிறவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன !

 

பளிங்கினைக் கரைத்துச் சொரிவது போல அருவி வீழ்கிறது. அதில் உருவாகும் சுனையில் தலைவியும் தோழியரும், நீராடிக் கரையேறுகின்றனர். தலைமுடியைப் பிழிந்து உலர்த்தும் அவர்களது கண்கள், நீண்ட நேரம் நீராடியதால் சிவந்து காணப்படுகின்றன. இக்காட்சியைக் குறிஞ்சிப் பாட்டு வண்ணிக்கிறது பாருங்கள் !

 

-----------------------------------------------------------------------------------

 

அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு, தெள் நீர்

அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி,

தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,

நளி படு சிலம்பில் பாயம் பாடிப்

பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்

பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி, 

உள்ளகம் சிவந்த கண்ணேம் !

 

------------------------------------------------------------------------------------

 

 

அடுத்து என்ன செய்கின்றனர் ? அங்கு பூத்திருக்கும் மலர்களின் அழகில் மயங்கி, அவற்றைப் பறித்து, அகன்ற பாறையில் குவிக்கின்றனர். எத்துணைப் பூக்கள் தெரியுமா ?

 

செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, நறுங்கண்ணி, குருகிலை, மருதம்......அப்பப்பா ! படித்து மூச்சு வாங்குகிறதா? இன்னும் இருக்கின்றன ! படியுங்கள் !

 

கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, கலிமா, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், மாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல், கைதை, நறுவழை, காஞ்சி, பாங்கர், மராம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி...அவ்வளவு தானா? இல்லை ! இல்லை ! இன்னும் இருக்கிறது ! படியுங்கள் !!

 

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, குருந்து, வேங்கை, புழகு, மால்...அம்மம்மா ! இத்துணைப் பூக்களையும் பறித்துப் பாறையில் குவித்திடும் பாவையரைப் பற்றிப் பாடும் குறிஞ்சிப் பாட்டு இலக்கியங்களிடையே தனி இடம் பிடித்து உயர்ந்து நிற்கிறது என்பதை மறுக்க முடியாது !

 

இத்தகைய சுவைமிக்கக் காட்சிகளைப் பாடலாகத் தொடுத்து நமக்கு அளித்திருக்கும் குறிஞ்சிப் பாட்டில், சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள்  அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போமா !

 

------------------------------------------------------------------------------------

 

DRAWING HALL................= அகலறை (பா.வரி.98)

MUSICAL INSTRUMENT. = இன்னியம் (பா.வரி.193)

HUNTING DOG..................= கதநாய் (பா.வரி.240)

GENTLE MAN....................= பெருந்தகை (பா.வரி.206)

GONG (சேகண்டி)..........= எறிமணி (பா.வரி.59)

HAIR DYE...........................= தகரம் (பா.வரி.108)

-----------------------------------------------------------------------------------

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-04-2022)

------------------------------------------------------------------------------------