தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 8 ஜூன், 2022

இலக்கிய அறிமுகம் (39) கைந்நிலை !

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் ஒழுகலாறு பற்றியதே இந்நூல் !

 -----------------------------------------------------------------------------------

 

கைஎன்பது இங்கே ஒழுக்கம் என்று பொருள்படும். எனவே கைந்நிலைஎன்பதற்கு ஒழுகலாறு பற்றியது என்று பொருள் சொல்லலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் ஒழுகலாறு பற்றியதே இந்நூல். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன !

 

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பது என்னும் நூலும் இவ் வரிசை முறையிலே அமைந்திருத்தல் கருத்திற் கொள்ளத் தக்கது. இந் நூற் செய்யுள்களில் பாலைத் திணை மற்றும் முல்லைத் திணைப் பாடல்களில் சிதைவுகள்  மிகுதியாகக் காணப்படுகின்றன !

 

குறிஞ்சித் திணையில் இரண்டு பாடல்களிலும் மருதம் திணையில் ஒரு பாடலிலும் சிறு சிதைவு காணப்படுகிறது. மொத்தத்தில் 18 பாடல்கள் முழுமையாக இல்லாமல் சிதைவு பட்டுள்ளன. எவ்வகையான சிதைவுமில்லாமல் முழுமையாகக் கிடைத்திருப்பவை இறுதியில் உள்ள நெய்தல் திணைப் பாடல்களே !

 

இந்நூலைப் படைத்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பவர். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். இவரது தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் காவிதிஎன்னும் சிறப்புப்பெயர் அளிக்கப் பெற்றவர் எனத் தெரிகிறது. இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவர் என்பது இவரது பெயர் உணர்த்தும் கருத்தாகும் !

 

தமிழகத்தில் வடமொழியின் மேலாண்மை முனைப்பாக இருந்த காலமான கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்நூல் தோன்றியிருத்தல்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்து ! இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம் முதலிய வடசொற்கள் இடம்பெற்றுள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது !

 

காதல் வாழ்வில் ஐந்து நிலைகள் உள்ளன. அவை (01) தலைவனும் தலைவியும் கூடல்; இது குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் (02) பொருள் ஈட்டிவரும் பொருட்டுத் தலைவன் பிரிதல்; இது பாலைத் திணைக்குரிய ஒழுக்கம் (02) பொருள் ஈட்டிய பின் தலைவன் இல்லம் திரும்பித் தலைவியுடன் இருத்தல்; இது முல்லைத் திணைக்குரிய ஒழுக்கம். (04) தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்கையில், தலைவி ஊடல் கொள்ளுதல்; இது மருதத் திணைக்குரிய ஒழுக்கம் (05) ஊடல் கொண்ட தலைவி தலைவனை நினைத்து இரங்குதல்; இது நெய்தல் திணைக்குரிய ஒழுக்கம் !

 

இந்த ஐந்து நிலைகளை எடுத்துரைக்கும் பாடலே இந்நூலான கைந்நிலையில் இடம் பெற்றுள்ளவை !

 

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் ஒரு பாடல் காட்சி ! தலைவி தோழியுடன் உரையாடுகிறாள் !

 

அடி என் அருமைத் தோழி ! அதோ பார் ! தினைக் கதிரைக் கொய்து செல்வதற்காகக் கிளிகள் தினைப் பயிரின் தாள்களைத் தன் கால்விரல்களால் பற்றிக் கொண்டு ஏறுகின்றன ! இந்தக் கிளிகளைத் தினைப் புனத்தை விட்டு விரட்டுவதற்கு வசதியாக  வயலின் நடுவில் பரண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன ! அங்கே புல் மேய்வதற்காக அழகிய மான் குட்டிகள் நிரம்ப வருகின்றன !

 

இத்தகைய எழிலார்ந்த தினைப் புனங்களையும் மலைச் சாரலையும், குறுங் காடுகளையும் உள்ளடக்கிய நாட்டுக்கு உரியவனான என் தலைவன் என் உள்ளத்தில் கலந்துவிட்டான் ! தன் இல்லம் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற அவன் ஏன் இன்னும் திரும்பி வரவில்லை ? தலைவன் என்னைக் காண இன்னும் வராமையால், என் உள்ளம் பதறுகிறது !

 

என் உடல் தளர்ச்சியுற்று, பசலை நிறமாகக் காட்சியளிக்கிறது ! என் வனப்பு சீர்குலைந்து விட்டது !  பாரடி ! என் தோழி ! அவர் எப்போது வருவார் ?

 

பாடல் இதோ !

 

-----------------------------------------------------------------------------------

 

நுகர்தல்  இவரும்  கிளிகடி  ஏனல்

நிகரில்  மடமான்  எரியும் அமர்சாரல்

கானக நாடன்  கலந்தான்  இவனென்று

மேனி  சிதையும்  பசந்து !

 

-----------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

 

ஏனல் = தினைக்கதிர்கள்; நுகர்தல் = கொய்து உண்பதற்காக; இவரும் = பயிரின் தாள்களைத்  தன் கால்களால் பற்றிக் கொண்டு ஏறும்;  கிளி = கிளிக் கூட்டத்தை; கடி = ஒலி எழுப்பி விரட்டுதல்; நிகரில் = நிகரற்ற அழகுடைய; மடமான் = இளம் மான்கள்; எரியும் = திரிகின்ற; அமர் சாரல் = உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் எழிலார்ந்த மலைச்சாரல்; கானகம் = குறுங்காடு; நாடன் = நாட்டுக்கு உரிய தலைவன்; கலந்தான் = என் உள்ளத்தில் கலந்து நிற்கிறான்; இவனென்று = இவன் எப்பொழுது திரும்பி வருவான்; மேனி = என் உடல்; பசலை = பசலை நிறம் படர்ந்து; சிதையும் = அழகு குன்றும்.

 

-------------------------------------------------------------------------------------

 

பொருள், புரிந்து கொள்வதற்குக் கடினமான நடைதான் ! எனினும்  அகரமுதலியின் உதவியுடன் பாடலின் பொருள் புரிந்து, உணர்ந்து படித்தால், மனதிற்கு நிறைந்த இன்பம் பயக்கும் என்பது திண்ணம் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 25]

{08-06-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக