தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 25 மார்ச், 2022

இலக்கிய அறிமுகம் (01) பத்துப்பாட்டு!

தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது பத்துப்பாட்டு ! 

 

பழந்தமிழ் நூல்களைப் பொதுவாக, ‘பத்துப் பாட்டு’, ‘எட்டுத் தொகை’, ‘பதினெண் கீழக்கணக்குஎன்று பாகுபடுத்தி உரைப்பது உரையாசிரியர்கள் காலந்தொட்டுப் பயின்று வரும் ஒரு மரபாகும். இம்முறை வைப்பில் பத்துப் பாட்டுசங்க காலத் தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுகிறது !

 

இது, பத்துப் பெரிய அகவற் பாடல்களைக் கொண்ட தொகுதி. பத்துப் பாட்டுத் தொகுதியில் அடங்கியுள்ள நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாகப் பழைய பாடல் ஒன்று உள்ளது. அப்பாடல் வருமாறு :-

 

----------------------------------------------------------------------------

முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,

பெருகு வளமதுரைக் காஞ்சி, மருவினிய

கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்

பாலை, கடாத்தொடும் பத்து.

----------------------------------------------------------------------------

 

திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய இப்பத்து நூல்களுமே பத்துப் பாட்டுஎன்று வழங்கப் பெறுபவை !

 

பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் தெரியவில்லை. திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் !

 

திருமுருகாற்றுப் படைக்கு புலவர் ஆற்றுப்படை’, என்ற பெயரும் உண்டு. மலைபடுகடாம் கூத்தர் ஆற்றுப்படைஎனவும் வழங்கும். முல்லைப்பாட்டு’, ‘குறிஞ்சிப்பாட்டு’, ’பட்டினப்பாலைமூன்றும் அகத்திணை ஒழுக்கம் பற்றியவை!

 

நெடுநல்வாடைஅகப் பொருள் செய்தி வாய்ந்ததாயினும், பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால், இது புறத் திணை நூலாகக் கருதப்படுகிறது. மதுரைக் காஞ்சிவீடுபேறு நிமித்தமான செய்திகளைக் கூறுவதால், இதையும் புறத்திணை நூலாக வகைப்படுத்திக் கூறுவர் உரையாசிரியர்கள் !

 

பத்துப் பாட்டு நூல்களுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு;  இதில் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரிய பாடல் மதுரைக் காஞ்சி; இதில் 782 அடிகள் உள்ளன !

 

பண்டைத் தமிழின் அழகையும் பெருமையையும், தொகை நூல்களை ஊன்றிப் படித்து மகிழ்வோமாக ! பழந்தமிழ்க் கருவூலங்களான இவற்றைத் தமிழ் பணி மன்ற நண்பர்கள் விருப்புடன் ஏற்று, போற்றிப் படித்துப் பயன் அடைவார்களாக!

 

சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பத்துப் பாட்டு நூல்களில் பரந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிவற்றை மட்டும் இங்குக் காண்போம் !

 

-----------------------------------------------------------------------------

 

ORCHESTRA...............= பல்லியம் (பா.வரி.119. திருமுரு)

HEAVY DUTY...............= மதவலி (பா.வரி.232. திருமுரு)

HIGHWAY ROBBERS..= ஆறலைக் கள்வர் (பா.வரி.21.பொருநர்

FUND...........................= நிதியம் (பா.வரி.249.சிறுபாண்)

HEIR (வாரிசு)............= பிறங்கடை (பா.வரி.30,பெரும்பாண்)

BACK YARD.................= படப்பை (பா.வரி.401.பெரும்பாண்)

SENIOR CITIZEN........= மூதாளர் (பா.வரி.54.முல்லைப்பாட்டு)

V.I.P..............................= விழுமியர் (பா.வரி.200.மதுரைக்காஞ்சி)

MECHANIC..................= கம்மியர் (பா.வரி.57.நெடுநல்வாடை)

BUNGALOW................= வளமனை (பா.வரி.223.குறிஞ்சிப்பாட்டு)

KITCHEN......................= அட்டில் (பா.வரி.43.பட்டினப்பாலை)

SONS...........................= மகார் (பா.வரி.236.மலைபடுகடாம்)

 

----------------------------------------------------------------------------

 

குறுக்க விளக்கம்:

திருமுரு = திருமுருகாற்றுப்படை;

பொருநர் = பொருநராற்றுப்படை

சிறுபாண் = சிறுபாணாற்றுப்படை

பெரும்பாண் = பெரும்பாணாற்றுப்படை


----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் இலக்கியம்” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு:2053, மீனம் (பங்குனி) 11]

{25-03-2022)

--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக